நல்லோர்களின் வாழ்வினில்

அறிஞர் பஹ்லூல்

மன்னர் ஹாரூன் ரஷீதின் அவையில் அறிஞர் பஹ்லூல் என்பவர் இருந்தார். விகடகவி மற்றுமல்ல...விவேகி. அவரிடத்தில் ஒருநாள் அரசர் ஒரு குச்சியைக் கொடுத்து உம்மிடம் இதை அமானிதமாக ஒப்படைக்கிறேன். இந்நாட்டில் உம்மைவிட மோசமான முட்டாள் யாரையாவது நீ சந்திதால் அவரிடம் இதை அன்பளிப்பாக வழங்குவீராக! என்றார். அரசரின் நோக்கம் இவரை நையாண்டி செய்து பார்ப்பது.

சில காலம் கழிந்தது. மன்னர் ஹாரூன் ரஷீது மரணப் படுக்கையில் கிடந்தார். அவரை நலம் விசாரிக்க பஹ்லூல் வந்தார்.
என்ன எப்படி இருக்கிறீர்கள் அரசரே!
பயணம் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்''     ''எங்கே பயணம்?''
''மறுமை நோக்கிப் பயணம்.''

''போய்விட்டு எப்பொது திரும்புவதாக உத்தேசம்?''
''பஹ்லூல்.. என்ன கேள்வி இது? இந்த பயணம் திரும்பா பயணம். மீள முடியா பயணம்.
''அப்படியா.. நீண்ட பயணம் என்றால் பயணத்திற்கான முன்னேற்பாடுகள் செய்துவிட்டீர்களா? பாதுகாப்புக்கு படைகளை அனுப்பிவிட்டீர்களா? பயணத்திற்கு தேவையான உணவு எல்லாம் தயாராக சென்றுவிட்டதா?
''என்னது முன்னேற்பாடா? அப்படி எதுவும் செய்யமுடியாத பயணம் இது. யாரையும் துணைக்கு அழைத்து செல்லமுடியாது. எதையும் எடுத்து செல்லமுடியாது. ''

''அப்படியா. மன்னா இதோ தாங்கள் அமானிதமாக தந்த இந்த தடியை தாங்களே பிடியுங்கள்.''
''ஏன் என்னிடம் தருகிறீர்கள் பஹ்லூல்?''

''திரும்பி வரக்கூடிய ஒரு சின்ன பயணத்திற்கே பல ஏற்பாடுகளை செய்வீர்களே.. பாதுகாப்பு படைகளையும் பயண உணவும் அனுப்புவீர்களே.. திரும்ப முடியா நீளமான மறுமைப் பயணத்திற்கு எந்த முன்னேற்பாடும் தங்களிடம் இல்லையே.. தங்களைவிட பெரிய முட்டாளை நான் கண்டதில்லை.

 எனவே இந்த தடியை வைத்திருக்க தாங்களே தகுதியானவர்.
இதைக் கேட்டதும் அரசர் அழுதார். ஆமான் பஹ்லூல்.. நீர் கூறியது உண்மை. உம்மை முட்டாள் என்று நினைத்தேன் ஆனால் நீர் ஞானி.


  மஹான் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்)



உனது உறவை வெட்டியவனோடு நீ ஒட்டிக்கொள். உனக்கு அநீதமிழைத்தவனை மன்னித்து விடு. உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்”  நபிமொழி.
صل من قطعك واعف عمن ظلمك واحسن من اساء اليك

ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் ஊருக்கு வெளியே வந்து கொண்டிருந்தான். அங்கே மஹான் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களை வழியில் கண்டு மக்கள் குடியிருப்பு எங்கே இருக்கிறது…..? எனக் கேட்டான். அதற்கு மஹான் அவர்கள் கப்ருஸ்தானை (கல்லறையை)க் காட்டி அதோ..... அது தான் என்று சொன்னார்கள். அவனுக்கு கோபம் வந்தது. நான் கப்ருஸ்தானைக் கேட்க வில்லை மக்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் கேட்கிறேன் என்று சொன்னான். அது தான் உண்மையில் மக்கள் குடியிருப்பு என திரும்பவும் சொன்னார்கள். கோபத்தில் கடுமையாக அடித்து விட்டான்.

வேகத்தோடு நகருக்கு வருகிறான். அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மஹானை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அதுகண்டு அதிர்ச்சியுற்ற குதிரை வீரன் நாம் நைய்யப்புடைத்த இந்த மனிதருக்கு இவ்வளவு வரவேற்பா? அப்படியென்றால் இவர் யார்இவர் தான் பல்க் நாட்டின் பேரரசராக இருந்து முடி துறந்த இறைஞானி  இப்ராஹீம் பின் அத்ஹம் என்று சொல்லப்பட்டது. அப்போது வேதனைப்பட்டு, நானிக்குருகி மஹானிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டான்.

நீங்கள் யார் என்று தெரியாமல் தவறு நடந்து விட்டது.என்னிடம் நீங்கள் உங்களைப் பற்றி அடிமை என்று சொன்னீர்கள்? அதனால் நடந்த விபரீதம் அல்லவா இது! ஏன் அப்படிச் சொன்னீர்கள்?. அதற்கு இறைஞானி அவர்கள்,அடிமையா?எனக்கேட்டீர். ஆம் என்றேன்.யாருக்கு அடிமை? என்று கேட்கவில்லை.கேட்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அடிமை என்று சொல்லியிருப்பேன் என்றார்.என்னை மன்னித்து எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கரைந்துருகி கேட்ட போது என்னை அடிக்கத் தொடங்கிய போதே உன்னை மன்னித்து உனக்கு சொர்க்கம் கிடைக்க பிரார்த்தனை செய்து விட்டேன் என்று சொன்னார்கள்.

அவன் உங்களுக்கு அநியாயம் செய்திருக்க அவனுக்காக இப்படியொரு பிரார்த்தனையா?எனக் கேட்கப்பட்ட போது, அவன் மூலமாக எனக்குத் தீங்கு ஏற்பட்டது. நான் மன்னிக்கவில்லை யெனில் என் காரணமாக அவனுக்குத் தீங்கு ஏற்படும் அல்லவா!

அப்படியென்றால் இருவருக்கும் மத்தியில் என்ன வித்தியாசம்? மேலும், நான் பொருமையாக இருந்ததால் எனக்கு அவன் மூலம் சொர்க்கத்தில் பதவி உயர்வு கிடைகும் போது என் காரணமாக அவனுக்கு நரகம் கிடைக்கக் கூடாதல்லவா! எனவே நான் அவனுக்காக பிரார்த்தனை புரிந்தேன் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்களின் கொள்ளுப் பேரர் ஜைனுல் ஆபிதீன்

روي ان زين العابدين علي بن الحسين رضي الله عنه كان في طريقه الي المسجد فسبه رجل فقصده غلمانه ليضربوه ويؤذوه فنهاهم فكف عنهم رحمة به ثم قال يا هذا انا اكثر مما تقول وما لا تعرفه عني اكثر مما تعرفه فان كان لك حاجة في ذالك ذكرته فخجل الرجل واستحيا فخلع عليه زين العابدين قميصه وامر له بالف درهم
நபி {ஸல்} அவர்களின் கொள்ளுப் பேரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு மனிதர் அவரை ஏசி திட்டிக் காயப்படுத்தினார்.அவரைப் பிடித்து அடிப்பதற்காக ஊழியர்கள் முனைந்த போது அவர்களைத் தடுத்து நிறுத்திய இமாம் அவர்கள் வசைபாடிய மனிதனை அழைத்து நீங்கள் சொன்னதை விட கூடுதலாக {குறை உள்ளவனாக} த்தான் இருக்கிறேன். என்னை பற்றி  உங்களுக்கு தெரிந்ததை விட  தெரியாத (குறை) தான் அதிகம் இருக்கிறது.உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் நிறைவேற்றி வைக்கிறேன் என்றார்கள்.

அப்போது அந்த மனிதர் வெட்கி, தலை குனிந்து கூனிக் குருகினார். அப்போது அவருக்கு இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் மேல் கடந்த சட்டையைக் கழட்டிக் கொடுத்ததோடு ஆயிரம் திர்ஹம் அவருக்கு கொடுக்க உத்தரவிட்டார்கள்.இப்படித்தான் மனிதப் புனிதர்கள் நடந்திருக்கிறார்கள்.



 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள்


شتم رجل احنف بن قيس وكان يتبعه فلما قرب من الحي وقف وقال يا بني ان كان بقي في قلبك شيئ فقله كيلا يسمعك  بعض سفهاء القوم فيجيبك
ஒருமுறை அஹ்னஃப் பின் கைஸ் ரஹ் அவர்களைத் திட்டிக் கொண்டே ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்.அமைதியாக சென்று கொண்டிருந்த அஹ்னஃப் ரஹ் அவர்கள் தனது குடியிருப்புக்கு அருகில் வந்த பொழுது நின்று நிதானமாக திரும்பி தன்னைத் திட்டியவனைப் பார்த்துக் கூறினார்கள் ; எனதருமை மகனே.... இன்னும் சொல்ல வேண்டியது எதுவும் மிச்சம் இருந்தால் இங்கேயே இப்போதே அதைக் கூறி திட்டித் தீர்த்து விடுங்கள்.ஏனென்றால் என் குடியிருப்பு வரப்போகிறது.அங்கே என் இனத்தைச் சார்ந்த சில அறிவிலிகள் உங்களது வசைவைக் கேட்டு உங்களுக்கு பதில் சொல்ல முற்படலாம்.

இரவில் சிறந்த நேரம்.



أبي سعيد الخدري قال : بلغنا أن داود عليه السلام سأل جبريل عليه السلام فقال : يا جبريل أي الليل أفضل؟ قال : يا داود ما أدري إلا أن العرش 
يهتز في السحر

தாவூத்(அலை) அவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் இரவில் சிறந்த பகுதி எது என்று கேட்டார்கள். அப்போது ஜிப்ரயீல்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய சிம்மானம் ஸஹர் உடைய நேரத்தில் அசையும் அந்த நேரம்தான் சிறந்த நேரம் என்றார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக